ஆற்றில் அடித்துவரப்பட்ட பாகிஸ்தான் சிறுவனின் உடலை மீட்ட இந்திய ராணுவத்தினர், அந்நாட்டு ராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு – காஷ்மீர் பகுதியிலுள்ள மினிமார்க், பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன் ஆபித் ஷேக், கடந்த 8ம் தேதி கிஷன்கங்கா நதியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இந்திய எல்லைப்பகுதி வரை ஆற்றில் அடித்து வரப்பட்ட சிறுவனின் உடலை, இந்திய ராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் குரேஸ்(Gurez) பகுதியில் மீட்கப்பட்ட சிறுவனின் உடலை பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் ஒப்படைக்க ராணுவத்தினர் முயற்சித்துள்ளனர்.
ஆனால் குரேஸ் பகுதியிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள, அதற்கென வரையறுக்கப்பட்ட இடத்தில் சிறுவனின் உடலை பெற்றுக் கொள்வதாக பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே சிறுவனின் பெற்றோர் உடலை மீட்டுத்தருமாறு வெளியிட்ட உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் மனிதநேய அடிப்படையில் சிறுவனின் உடல், கண்டெடுக்கப்பட்ட குரேஸ் பகுதிக்கு அருகிலேயே சோர்வான் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
WhatsApp us