உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகோயின் பதவிக் காலம் நவம்பர் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவருக்கு அடுத்த மூத்த தலைமை நீதிபதி என்ற வகையில், எஸ்.ஏ.பாப்டே புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுபவரின் பெயரை பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் மரபுப்படி, ரஞ்சன் கோகோய் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் எஸ்.ஏ.பாப்டேவை தமக்கடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு ரஞ்சன் கோகோய் பரிந்துரை செய்துள்ளார். பதவிக் காலம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதி நியமனத்திற்கான பணிகளை ரஞ்சன் கோகோய் தொடங்கி உள்ளார். அவரது பரிந்துரை ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவர் உத்தரவிட்டால் இந்தியாவின் 47ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே வரும் 18ஆம் தேதி பதவியேற்றுக்கொள்வார்.
உச்சநீதிமன்றத்தில் எஸ்.ஏ.பாப்டேவின் பதவிக் காலம் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி வரை உள்ளது குறிப்பிடத்தக்கது. மராட்டியத்தை சேர்ந்த பாப்டே, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர்.