பஞ்சாப் மாநிலத்தில் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆயுதங்களை வினியோகம் செய்ததை இந்திய எல்லை பாதுகாப்பு படை கண்டறிந்துள்ளது.
இதையடுத்து கடந்த 4-ஆம் தேதி அன்று எல்லை பாதுகாப்பு படையின் உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் ஆளில்லா குட்டி விமானங்களை ஒடுக்கும் தொழில் நுட்பத்தை கையாளுமாறு எல்லை பாதுகாப்பு படைக்கு அமித் ஷா உத்தரவிட்டார். ஆளில்லா குட்டி விமானங்களை கண்காணிக்க எல்லை நெடுகிலும் பாதுகாப்பு வீரர்கள் குவிக்கவும், 1000 அடி அல்லது அதற்கு கீழாக பறந்து வரும் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தவும் அவர் உத்தரவிட்டார்.
இதனை அடுத்து ஆளில்லா குட்டி விமானங்களை தடுக்கும் கருவிகளை வாங்க தீர்மானித்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படை கூறியுள்ளது. ஜி.பி.எஸ். அமைப்பை முடக்கும் திறனும், 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்கும் வல்லமை கொண்ட கருவியை வாங்க உள்ளதாகவும், இதனை எல்லை நெடுகிலும் அமைக்க உள்ளதாகவும் பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலகோட்டில் மீண்டும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், அங்கு 40 முதல் 50 பயங்கரவாதிகளுக்கு தற்கொலை தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பயிற்சி கொடுத்து வருவதாக இந்திய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை சார்பில் நடைபெற்ற பயங்கரவாத தடுப்பு கருத்தரங்கத்தில் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் தேசிய கொள்கையாகவே கடைபிடித்து வருகிறது என்றார். இதனால், சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு கண்காணிப்பு அமைப்பான எப்.ஏ.டி.எப்-பிடம் இருந்து பாகிஸ்தானுக்கு கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது என்பது நன்கு தெரிந்தாலும், சர்வதேச அளவில் இதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் தேவைப்படுகிறது” என்று அவர் கூறினார். தேசிய புலனாய்வு முகமை, பயங்கரவாத தடுப்பு படை, சிறப்பு அதிரடி படையினர், பாகிஸ்தானுக்கு எதிராக ஆதாரங்களை திரட்ட வேண்டும் என்று அஜித் தோவல் வலியுறுத்தினார்.