1993ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகளை அடுத்து தாவூத் இப்ராகிம், டைகர் மேமன் உள்ளிட்டோர் நாட்டை விட்டு தப்பிச் சென்றனர். அப்போது மகாராஷ்ட்ராவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த சரத் பவார் அரசு நிழல் உலக தாதாக்களுடன் ரகசியமாக கைகோர்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அண்மையில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல் தாவூத் கூட்டாளியின் நிழல் கம்பெனிகளுடன் வர்த்தக பரிமாற்றம் செய்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இந்த பின்னணியில் நவி மும்பை பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மும்பையின் ரயில்களிலும் பேருந்துகளிலும் குண்டுகளை வெடிக்கச் செய்தவர்கள் எதிரி நாட்டிடம் அடைக்கலம் பெற்று நாட்டை விட்டுத் தப்பிச் சென்றது எப்படி என்பது விரைவில் அம்பலத்துக்கு வரும் என்றார்.
புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பதாகவும் , குற்றத்தைப் புரிந்தவர்கள், அவர்களைத் தூண்டிவிட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று தெரிவித்த மோடி, தாம் அம்பலப்படுத்தப்படுவோம் என்பதை அறிந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பதற்றம் அடைந்திருப்பதாக கூறினார். இதனால் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி திசைதிருப்ப முயற்சிப்பதாகவும் மோடி குற்றம் சாட்டினார்.
ஆர்.எஸ்.எஸ். பிதாமகர் வீரசாவர்க்காருக்கு பாரத ரத்னா விருது என்ற பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கைக்கு மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். அவருடைய மதிப்பீடுகள் காரணமாகவே நாங்கள் தேசியவாதத்தை நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய அம்சமாக கருதுகிறோம் என்று குறிப்பிட்ட மோடி, கடந்த கால காங்கிரஸ் அரசுகள் டாக்டர் அம்பேத்கருக்கும் உயரிய விருதை வழங்க மறுத்துள்ளதாக கூறினார். சந்திரசேகர் பிரதமரானபோது 1990ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டதையும் மோடி நினைவு கூர்ந்தார்.
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதையும் ஆதரித்துப் பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதிகளுடனான சண்டையில் ஏராளமான இந்திய வீரர்கள் உயிர்களை இழந்ததாக கூறினார். எதிர்க்கட்சியினருக்கு வெட்கமே இல்லையா என்று கேள்வி எழுப்பிய மோடி, காஷ்மீரும் அதன் மக்களும் மதர் இந்தியா எனக்கூறுவதை எதிர்க்கட்சியினர் கேட்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார்.