டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடன் வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து வங்கிகள் அறிக்கை தந்துள்ளன என்றார். மேலும், வங்கிக் கடனை கட்டி முடித்த 15 நாட்களுக்குள் கடன் பத்திரங்கள் திருப்பித் தரப்படும் என்று அவர் கூறினார். தொழில்துறை ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடரும் என்ற அவர், 8 வங்கிகள் ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்திற்கு இணையான வட்டியில் கடன்களை அளித்து வருவதை சுட்டிக்காட்டினார். நடப்பு ஆண்டில் 3,300 கோடி ரூபாய் அளவுக்கு வீட்டுக் கடன் உதவி அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பணப் புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், கடன் மேலாண்மை எளிமைப்படுத்தப்படும் என்றார். வாராக் கடன் அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும், 75 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடன் வசூலில் சாதனை படைத்துள்ளதாகவும், பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபத்தில் இயங்குவதாகவும் அவர் கூறினார். சில்லறை வணிகத்துக்கான கடன் வழங்குவது 21 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும், வங்கி நிர்வாகத்தில் அரசின் தலையீடு துளி கூட இல்லை என்றும், 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்க அரசு தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.
நீரவ் மோடி போன்றவர்களால் ஏற்பட்ட வங்கி மோசடி சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வங்கிகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். நிபுணத்துவம் வாய்ந்தவர்களை வங்கிகளின் உயர் பதவிக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
பஞ்சாப் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் வங்கிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற அவர், தென்னிந்தியாவில் கனரா வங்கி, சிண்டிகேட் வங்கிகள் இணைக்கப்படும் என்றார். ஆந்திரா வங்கி, யூனியன் வங்கி, கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படும் என்றும், இதேபோல், இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கியும் இணைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வங்கிகள் இணைக்கப்படுவதால் இனி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்கும் என்றும், செலவினங்களைக் குறைக்கவும், அதிக அளவில் வங்கி சேவையை அளிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார். உலக அளவில் இந்திய வங்கிகள் விரிவடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்க செயல்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் அந்த வங்கிகள் நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக உருவெடுக்கும். அந்த வங்கிகளின் மொத்த வர்த்தகம் 18 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.
இதே போன்று கனரா வங்கியும், சிண்டிகேட் வங்கியும் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம் அவை மூன்றாவது பெரிய வங்கியாக மாறும்.அவற்றின் மொத்த வர்த்தகம் 15.2 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.
யூனியன் வங்கி, ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கிகள் இணைக்கப்படுவதன் மூலம் அவை நாட்டின் நான்காவது பெரிய வங்கியாக மாறும். அவற்றின் மொத்த வர்த்தகம் 14.6 லட்சம் கோடியாக உயரும்.
இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்படுவதன் மூலம் புதிய வங்கி நாட்டின் ஏழாவது பெரிய வங்கியாக மாறும். அவற்றின் மொத்த வர்த்தகம் 8.08 லட்சம் கோடியாக உயரும்.
WhatsApp us