முறைகேடு வழக்கில் சிக்கி சிறை சென்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கான, அமலாக்கத்துறை காவல் வருகிற 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், விசாரணைக்குப் பிறகு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவரை சிறையில் வைத்தே அமலாக்கத்துறை கைது செய்தது.
இதனைத் தொடர்ந்து, ப.சிதம்பரத்தை நீதிமன்ற அனுமதியோடு, காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. இன்றுடன் காவல் முடிவடைந்ததை அடுத்து, அதனை நீட்டிக்குமாறு அனுமதி கோரியது.
இதையடுத்து, வருகிற 30ஆம் தேதிவரை ப.சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைத் தேவைப்பட்டால், ப.சிதம்பரத்தை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கலாம் என்றும், நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில், ப.சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த ஜாமீன் மனுவை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கைத் (Suresh Kait), இதன் மீது ஒரு வார காலத்திற்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டதோடு, விசாரணையை, அடுத்த மாதம் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
