சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இரண்டு நாள் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டாவது முறையாக மாமல்லபுரத்தில் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார். அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமியுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு நடைபெற இருப்பதை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கடல் பகுதியில் போர்க்கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 5 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் மாமல்லபுரம் ஒரு இரும்புக் கோட்டையாக மாறியுள்ளது.
பிரதமர் மோடி-சீன அதிபர் வருகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று மற்றும் நாளை என 2 நாட்களும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கனரக மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்கள், டேங்கர் லாரிகள், ஜி.எஸ்.டி.சாலை, அண்ணா சாலை, ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய வழித் தடங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பகல் 12.30 மணியிலிருந்து 2 மணிவரை பெருங்களத்தூரிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும், மதுரவாயல் புறவழிச் சாலை வழியாக திருப்பி விடப்படும். தாம்பரம் குரோம்பேட்டை பகுதியிலிருந்து வரும் வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக செல்ல வேண்டும்.
இன்று மதியம் 3.30 முதல் 4.30 வரை ஜி.எஸ்.டி. சாலையில் வரும் வாகனங்கள் 100 அடி சாலைவழியே திருப்பிவிடப்படும் மதியம் 2 மணி முதல் இரவு 9மணி வரை ஈசிஆர் வரும் வாகனங்கள் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதியில்லை. நாளை காலை 7.30முதல் மதியம் 2மணிவரை ஓஎம்ஆர் வழி வரும் அனைத்து வாகனங்கள் பெரும்பாக்கம் வழியே திருப்பிவிடப்படும், நாளை காலை 7 முதல் பிற்பகல் 1.30 வரை அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு செல்ல அனுமதியில்லை.
சீன அதிபர் ஜின்பிங்கின் சென்னை வருகையை முன்னிட்டு கிண்டி வழித்தடத்தில் சிறிது நேரம் ரயில்கள் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் மற்றும் விரைவு ரயில்கள் பல்லாவரம் பகுதியில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பிறகு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருநாட்டு தலைவர்கள் வருகையால் மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்க காஞ்சிபுரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இன்றும் மற்றும் நாளை கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரத்தில் உள்ள திரையரங்குகளை மூடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.