தனிமனிதர்களையும் தீவிரவாதிகள் என அறிவிக்க வகைசெய்யும், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத் திருத்தம் மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது.
UAPA எனக் குறிப்பிடப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு முக்கிய திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. இதில், அமைப்புகளை மட்டுமின்றி, தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தனிநபர்களையும் தீவிரவாதிகளாக அறிவிக்கும் திருத்தம் சர்ச்சைக்குள்ளானது.
தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்பதே இந்த சட்டத் திருத்தத்தின் நோக்கம் என்றும், சட்டம் தவறாகப் பயன்படுத்தப் படாது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் உறுதி அளித்தார்.
கடந்த 24ஆம் தேதி மக்களவையில், விவாதத்திற்குப் பிறகு சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 287 எம்பிக்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. 8 எம்பிக்கள் மட்டுமே மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.
இந்நிலையில், இந்த சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் விவாதத்திற்குப் பிறகு நிறைவேறியுள்ளது. மசோதாவுக்கு ஆதரவாக 147 வாக்குகளும், எதிராக 42 வாக்குகளும் கிடைத்த நிலையில் மசோதா நிறைவேறியதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்தார்.
UAPA சட்டத்திருத்தம் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறியிருப்பதால் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும்.
