அத்தி வரதரை தரிசிக்க வந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அத்தி வரதர் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி இன்று 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அத்தி வரதர் திருவிழாவிற்கு தினசரி லட்சக்கணக்கான வந்து செல்லும் நிலையில் அங்கு போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை எனவே அரசு விரைந்து போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த ஒன்றாம் தேதி முதல் அடுத்த மாதம் 17ம் தேதி வரை நடைபெறும் அத்திவரதர் திருவிழாவை ஒட்டி, பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் வரிசையில் நிற்கும் இடங்களில் பந்தல் அமைப்பது, குடிநீர் கழிப்பிடம் வயதானவர்களுக்கு சக்கர நாற்காலிகள் பேட்டரி கார்கள் என அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கடந்த ஒன்றாம் தேதி முதல் நேற்று வரை சுமார் 28 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர்.
இன்று திருவோண நட்சத்திரம் என்பதால் ஒன்று லட்சத்து 70 ஆயிரம் பேர் தரிசனத்திற்காக வந்துள்ளனர்.
இன்று தரிசனம் செய்து செய்து விட்டு திரும்பிய போது, 4 பேர் ரத்தக் கொதிப்பு இருதய நோய், வலிப்பு நோய் போன்ற காரணங்களால் உயிரிழந்திருப்பதாகவும் கடந்த மூன்றாம் தேதி கால்தவறி விழுந்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்ச ரூபாய் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கர்ப்பிணிப் பெண்கள் வயது முதிர்ந்தோர் ஊனமுற்றோர் சிறுவர்கள் ஆகியோர் தரிசனத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே கூறியிருந்ததையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மக்கள் கூட்டம் அதிகமாக வரும் என்று அரசு எதிர்பார்க்கவில்லை இருப்பினும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் முழு அளவில் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்
