நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்ட நிலையில், மழை நீரை சேகரித்து வைத்து பயன்படுத்தும் புதிய முறையை செயல்படுத்தி வருகிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர். அது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காண்போம்
ஒரு குடம் தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் செல்லும் அவல நிலை… அசுத்தமான கழிவுநீரைப் பயன்படுத்தும் சூழல் இதற்கெல்லாம் மழைநீரை சேமிக்காததே காரணம் என ஒற்றை வரியில் சொல்லிவிடலாம்…
நிலத்தடி நீர் பலநூறு அடிக்குக் கீழே சென்றுவிட்ட நிலையில், மழை பெய்யும்போது கிடைக்கும் நீர் முழுவதையும் சேகரிப்பது மிகவும் அவசியமாகிறது.
அவ்வாறு மழை நீரை கொஞ்சமும் வீணடிக்காமல் சேகரிக்கும் புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார் கும்பகோணம் அருகே முத்தையபிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்த அருணன் என்ற அரசுப் பள்ளி ஆசிரியர்.
இவரது வீட்டின் மேல் தளத்தில் 600 சதுர அடி தகர ஷீட் அமைத்து அதன் மூலம் வரும் மழை நீரை குழாய் வழியாக ஃபைபர் தொட்டியில் சேகரிக்கிறார். ஃபைபர் தொட்டியின் கீழே நிலக்கரியும், அதன் மேலே சிப்சும், அதற்கும் மேலே பெருமணலும் நிரப்பப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் விழும் மழை நீர் வடிகட்டப்பட்டு முதல் தளத்தில் உள்ள 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 டேங்குகளிலும், தரை தளத்தில் உள்ள 2 டேங்குகளிலும் சேமிக்கப்படுகிறது. மீதமுள்ள மழை நீர் நிலத்தடி நீருக்காக பாய்ச்சப்படுகிறது. இவ்வாறு சேமிக்கப்பட்ட மழை நீர் மிகவும் தூய்மையாக இருப்பதாக கூறுகிறார் அருணன்
இந்த மழை நீர் சேமிப்பு முறையை அமைக்க 70 ஆயிரம் ரூபாய் செலவானதாகவும்,சேமிக்கப்பட்ட 2 ஆயிரத்து 500 லிட்டர் மழை நீர் அடுத்த பருவ மழை வரும் வரை அதாவது 7 மாதங்களுக்கு போதுமானது என்கிறார் அவர்.
தண்ணீர் தட்டுப்பாடு உள்ள சூழலில் இது போன்ற மழை நீர் சேமிப்பு முறைகள் அனைவரது இல்லங்களிலும் மிக அவசியம்.
