சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.258 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசாக வழங்கப்பட உள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு துண்டு அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில், ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் இலவச பொங்கல் பை வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி, அரை கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம், பாசிப்பயிறு 100 கிராம், முந்திரி 10 கிராம், திராட்சை, ஏலக்காய் தலா 5 கிராம் அடங்கிய இலவச பொங்கல் பை வழங்கப்பட்டது. இதையடுத்து, 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் கைவிடப்பட்டது.
பின்னர் 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், இலவச பொங்கல் பை திட்டத்திற்கு பதில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.20 மதிப்புள்ள ஒரு கிலோ பச்சரிசி, ரூ.40 மதிப்புள்ள ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.100 ரொக்கம் என சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் மட்டுமே இந்த திட்டம் நடைமுறையில் இருந்தது. கடந்த 2015ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்றதால் பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை. பின்னர் 2016ம் ஆண்டு முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
2019ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பொங்கல் பரிசு வழங்க ரூ.258 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதேபோல் பொங்கல் பரிசாக திருவாரூர் மாவட்டம் தவிர பிற மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கு ரூ. 1000 வழங்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.
WhatsApp us