டி.டி.வி. தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு; டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் இரட்டை இலை வழக்கு 4 வாரத்தில் முடிக்க உத்தரவு.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் அஜய் ரஸ்தோகி அமர்வில் வழங்கப்பட்டது. அப்போது “அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது. அதே நேரத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இரட்டை இலை தொடர்பான வழக்கை 4 வாரத்துக்குள் முடிக்க வேண்டும். ஒரு வேளை வழக்கு முடியாமல் தொடர்ச்சியாக நடந்து வரும் இடைக்கால வேளையில் ஏதேனும் தேர்தல் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டால் டி.டி.வி.தினகரன் அணியினர் தேர்தல் ஆணையத்தை அணுக வேண்டும்.
அவர்கள் இந்த விவகாரத்தில் ஒரு வார காலத்தில் முடிவு எடுக்க வேண்டும். மேலும் ஏற்கனவே குக்கர் சின்ன விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ரேகாபள்ளி கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ந் தேதி வழங்கிய தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையும் நீக்கப்படுகிறது என்று தெரிவித்தனர். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ரேகாபள்ளி கடந்த ஆண்டு இரட்டை இலை சின்னத்தை வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வருவதால் டி.டி.வி. அணிக்கு குக்கர் சின்னம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
