மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் மீது, புதிய இந்தியாவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக, பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் தலைநகர் பாரிசில், யுனெஸ்கோ தலைமையகத்திற்கு சென்றார். அங்கு யுனெஸ்கோ தலைமை இயக்குநர் ஆட்ரி அசவ்லே-யை Audrey Azoulay சந்தித்துப் பேசினார்.
பிரான்ஸ் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றியபோது, மோடி….மோடி…என்ற முழக்கத்தால் யுனெஸ்கோ அரங்கமே அதிர்ந்தது.
மக்களவை தேர்தலில் இந்திய மக்கள் தங்களுக்கு அளித்துள்ள வெற்றி வெறுமனே அரசாங்கத்தை நடத்துவதற்காக மட்டுமல்ல என்றும், புதிய இந்தியாவை கட்டமைப்பதற்காகவே மக்கள் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் மோடி குறிப்பிட்டார்.
கால்பந்தை நேசிக்கும் ஃபிரான்ஸ் நாட்டில், இலக்கை எட்டும் “கோல்” என்பதன் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் கூறினார். அந்த வகையில் சாத்தியமில்லாதது என முன்னர் கருதப்பட்ட இலக்குகளை கடந்த 5 ஆண்டுகளில் நிர்ணயித்து நிறைவேற்றி வருவதாகவும் மோடி தெரிவித்தார்.
புதிய இந்தியாவில், தீவிரவாதம், ஊழல், குடும்ப ஆட்சி, மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக முன்னப்போதும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆட்சிக்கு வந்த 75 நாட்களில் புதிய அரசு பல வலிமையான முடிவுகளை எடுத்திருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
உள்கட்டமைப்பைக் குறிக்கும் இன்ஃபிரா என்ற ஆங்கில வார்த்தை, தம்மைப் பொறுத்தவரை இந்தியா-ஃபிரான்ஸ் கூட்டைக் குறிப்பதாகவும் அவர் கூறினார்.
பாரிஸ் நகரிலும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படும் என்பதையும், அப்போது பாரிஸ் குட்டி இந்தியா போல காட்சியளிக்கும் எனவும் பிரதமர் கூறினார்.
