மாமல்லபுரம் கடற்கரையில், காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றினார். பொது இடங்களை தூய்மையாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்வோம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சீன அதிபர் ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தைக்காக சென்னை வந்த பிரதமர் மோடி, கோவளத்தில் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் என்ற ரிசார்ட்டில் தங்கினார். இந்நிலையில் இன்று காலை கடற்கரையில் நடைப் பயிற்சியும், உடற்பயிற்சியும் மேற்கொண்ட பிரதமர் மோடி, அதுதொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மாமல்லபுரத்தில் எழில்மிகு கடற்கரையில், புத்துணர்ச்சியூட்டும் நடைப் பயிற்சியும், உடற்பயிற்சியும் மேற்கொண்டதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, கடற்கரையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றித் தூய்மைப் பணியில் ஈடுபட்ட வீடியோவையும் பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜாகிங் செய்தபடியே, செல்லும் வழியில் குப்பைகூளங்களை அகற்றி துப்புரவு பணியில் ஈடுபடுவதை பிளாகிங் (plogging) எனக் குறிப்பிடுகின்றனர். பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருவது சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தாக மாறியதைத் தொடர்ந்து, பிளாகிங் எனப்படும் இந்த முன்னுதாரணமான நடைமுறை உலகம் முழுவதும் பரவி வருகிறது.
பிளாகிங் எனப்படும் இந்த முறையில், நடைப் பயிற்சி மேற்கொண்ட படியே பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை மாமல்லபுரம் கடற்கரையில் அகற்றியதாகவும், 30 நிமிடங்களுக்கும் அதிகமாக இந்த பணியை மேற்கொண்டதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
கடற்கரையில் சேகரித்த குப்பைகளை ஹோட்டல் ஊழியர் ஜெயராஜிடம் ஒப்படைத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பொது இடங்கள் தூய்மையாகவும் நேர்த்தியாகவும் இருப்பதை உறுதி செய்வோம் என்றும், உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதை உறுதிசெய்வோம் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.