அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு இன்றுமுதல் நாள்தோறும் விசாரிக்கிறது.
இந்த வழக்கில் 2010-ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு இதனை விசாரித்து வருகிறது.
இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழுவைக் கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் அமைத்தது.
இக்குழு தனது அறிக்கையை கடந்த வாரம் தாக்கல் செய்தது. இந்த வழக்கு மீதான விசாரணை, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது, மத்தியஸ்தர் குழு அறிக்கையில், சமரச முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்றுமுதல் நாள்தோறும் நடைபெறவுள்ளது.
