ஜோதிகா – ரேவதி நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஜாக்பாட் என்ற படத்தில் அட்சயபாத்திரம் இருந்தால் தங்கம் அள்ள அள்ள வரும் என்று கதை சொல்லி இருப்பார்கள்..! அதே கதையை நிஜத்தில் சொல்லி 2 கோடியே 10 லட்சம் ரூபாயை அபேஸ் செய்த சம்பவம் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அரங்கேறி உள்ளது.
திருப்பத்தூரை சேர்ந்த தொழில் அதிபர் நவீன் என்பவரை டேப் சுற்றப்பட்ட அட்டை பெட்டியுடன் சந்தித்த 8 பேர் கொண்ட கும்பல், தங்களிடம் தங்க புதையலை அள்ளித்தரும் அட்சய பாத்திரம் ஒன்று கைவசம் இருப்பதாகவும், அதனை வைத்து டன் கணக்கில் தங்க புதையலை அள்ளலாம் என்று கிலோ கணக்கில் கதை அளந்து விட்டுள்ளனர்.
மேலும் அவரை சித்தூர் அருகே ஒரு பகுதிக்கு அழைத்துச்சென்று நம்ப வைக்கும் விதமாக, தாங்கள் ஏற்கனவே பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த சில தங்க நகைகளை எடுத்துக்காட்டி சதுரங்க வேட்டை பட பாணியில் நவீனுக்கு ஆசை காட்டி மூளைச் சலவை செய்துள்ளனர்.
தன் கண்கள் முன்னே தங்க நகைகளை புதையல் போல எடுப்பதை பார்த்து உண்மை என்று நம்பி ஏமாந்து போன தொழில் அதிபர் நவீன், 2 கோடியே 10 லட்சம் ரூபாயை அந்த கும்பலிடம் விலையாக கொடுத்து தங்க புதையல் தரும் அட்சயபாத்திரம் இருப்பதாக கூறப்பட்ட பெட்டியை வாங்கியுள்ளார். அந்த பெட்டியை பூஜையில் வைத்து திறந்து பார்த்தால் இன்னும் அதிக தங்க புதையல் கிடைக்கும் என்று அந்த கும்பல் சொன்னதை நம்பி பூஜையில் வைத்துள்ளார்.
சில தினங்கள் கழித்து அந்த அட்டை பெட்டியை திறந்து பார்த்தால் உள்ளே அட்சயாவும் இல்லை..! பாத்திரமும் இல்லை..! வெறும் அட்டை பெட்டி மட்டும் தான் இருந்தது..!
இருந்தாலும் பாத்திரம் இல்லாதது, டெக்னிக்கல் பால்டாக இருக்குமோ என்ற எண்ணத்தில் அந்த பெட்டியுடன் சில இடங்களுக்கு சென்று பெட்டிக்குள் கைவிட்டு தங்க புதையலை தேடினார் , தங்கமும் வரவில்லை புதையலும் கிடைக்கவில்லை..! அதன் பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் நவீன். சித்தூர் அருகே குடிப்பள்ளியில் உள்ள ஒருவரது வீட்டில் வைத்து பணம் கொடுக்கப்பட்டதால் குடிப்பள்ளி காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
தனிப்படை அமைத்து அட்சய பாத்திர மோசடி கும்பலை சில மாதங்களாக தேடிவந்த காவல்துறையினர் 8 பேர் கொண்ட கும்பலை குடிப்பள்ளி ரெயில் நிலையம் அருகே சுற்றி வளைத்தனர். ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் கட்டு கட்டாக 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். மொத்தம் ஒரு கோடியே 29 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது அதன் உடன் 18 லட்சம் மதிப்புள்ள இனோவா கார் ஒன்றும், 2 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றும் 80 ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த மோசடியில் தொடர்புடைய காஞ்சிபுரம் விநாயகம், கிருஷ்ணகிரி சேகர், ராமச்சந்திரா ஆந்திரா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.
மண்ணுளி பாம்பு, இரிடியம், பெட்ரோமாக்ஸ் லைட், ரைஸ் புல்லிங் வரிசையில் தற்போது தங்க புதையல் தரும் அட்சயபாத்திரம் மோசடி அம்பலத்துக்கு வந்துள்ளது. டன் கணக்கில் தங்க புதையல் தரும் அட்சய பாத்திரம் அவர்களிடம் இருந்தால் அதைவைத்து ஒரே நாளில் டன் கணக்கில் தங்கத்தை எடுத்து அவர்களே பல கோடி ரூபாய்க்கு அதிபதி ஆகி இருக்கலாமே ? ஏன் நம்மிடம் 2 கோடி ரூபாய்க்கு தருகின்றனர் என்று நவீன் சற்று சிந்தித்திருந்தால் மோசடி கும்பலிடம் ஏமாந்திருக்கும் நிலை வந்திருக்காது..!
இது போன்ற மோசடிகள் எல்லாம், இல்லாத ஒன்றை இருப்பதாக நம்ப வைத்து வருமானம் பார்க்கும் வழக்கமான தந்திரம் என்பதை என்று உணர்கிறோமே அன்று தான் இது போன்ற மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி விழும்.