சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக ஸ்ரீநகருக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே தீவிரவாதிகளையும் பாகிஸ்தான் அத்துமீறலையும் உயிரைப் பணயம் வைத்துத் தடுத்து வரும் ராணுவ வீரர்களை சந்தித்து பாகிஸ்தானின் திட்டத்தை முறியடித்து வருவதற்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.
எல்லையை காக்கும் வீரர்கள் மிகுந்த விழிப்புடன் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். எல்லைப்பகுதியில் கடந்த 25 நாட்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 22 முறை அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதை குறித்தும் அவரிடம் ராணுவ அதிகாரிகள் விவரித்தனர். படைகளின் தயார் நிலை, சட்டம் ஒழுங்கு நிலையை பாதுகாப்பதில் ராணுவத்தினரின் பங்கு உள்ளிட்டவற்றை அவர் நேரில் ஆய்வு செய்தார்.
ஏராளமான தீவிரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவக் காத்துக் கொண்டு இருப்பதாக உளவுத்துறை வெளியிட்ட எச்சரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் பிபின் ராவத் ஆலோசனை மேற்கொண்டார்.
