வடமாநிலங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போய் உள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் மழையினால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. விபத்து சம்பவங்களில் 24 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிம்லாவில் தொடர்ந்து இருநாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. தொடர்ந்து பெய்யும் மழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா சென்றவர்கள் ஆங்காங்கே தவித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் ஷாம்லி என்ற இடத்தில் யமுனை ஆற்றில் வெள்ளம் அபாயகட்டத்தை தாண்டி ஓடுகிறது. அந்த ஆற்றில் 8 லட்சத்து 28 ஆயிரம் கனஅடி நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஜின்ஜனா, கைரானா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் முழுமையாக மூழ்கும் அபாயத்தில் உள்ளன.
எனவே கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ஷாம்லி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் கங்கை, யமுனா, கக்ரா நதிகளில் அண்டை மாநிலங்களில் பெய்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதேபோல் உத்ரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் கனமழை வெள்ளத்தால் 17 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. இந்த மாநிலத்தில், சார்தாம் யாத்திரை எனப்படும், நான்கு புனித கோவில்களுக்கு செல்லும் வழித்தடத்தில், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், யாத்திரை தடைப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் டிப்பர் லாரியும், ஜேசிபி எந்திரமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
