இருநாள் பயணமாக பிரதமர் நரேந்திரமோடி, நேற்று பூடான் சென்றார். பூடான் மன்னர் ஜிக்மே கெய்சர் நாம்கியால் வாங்சக் (jigme khesar namgyel wangchuck) மற்றும் அந்நாட்டு பிரதமர் லோட்டே ஷெரிங்கை (Lotay tshering) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பின், இந்தியா-பூடான் இடையே பாதுகாப்பு, நீர் மின்னுற்பத்தி, மின்சாரம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்நிலையில், இன்று தலைநகர் திம்புவில் உள்ள பூடான் ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் மோடி உரையாற்றினார். பூடானின் இயற்கை அழகும், மக்களின் அரவணைப்பும், எளிமையும் அனைவரையும் கவர்ந்து விடும் என்று குறிப்பிட்டார்.
இந்தியா – பூடான் மக்களிடையே இயற்கையாகவே மிகச் சிறந்த பிணைப்பு இருப்பதாக மோடி கூறினார். இந்தியாவின் வளர்ச்சி குறித்து பேசிய அவர், நாட்டு இளைஞர்களின் ஆசைகளும், கனவுகளும் தான், பலதுறை மாற்றங்களுக்கும், சீர் திருத்தங்களுக்கும் இதயம் என்று குறிப்பிட்டார். கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் உள்கட்டமைப்புகள், இரட்டிப்பாகி உள்ளதாக மோடி தெரிவித்தார்.
ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தைக் குறிப்பிட்டு பேசிய அவர், உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது எனக் கூறினார். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாய்ப்புகள் பெருகி வருவதாகக் கூறிய பிரதமர் மோடி, அதேவேளையில் பல சவால்களும் இருப்பதாகத் குறிப்பிட்டார். ஆனால் ஒவ்வொரு சவாலுக்கும், இளைஞர்களின் அறிவால் புதுமையான தீர்வுகள் காணப்படுவதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, பாரோ சர்வதேச விமான நிலையம் சென்ற மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். பூடான் பயணம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மறக்க முடியாத பயணம் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
பூடான் மக்கள் காட்டிய அன்பு, என்றும் மறக்க முடியாதது என்று குறிப்பிட்டுள்ள மோடி, இந்தப் பயணத்தின் மூலம், இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் மேம்படும் என்று தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக நிகழ்ச்சியைத் தொடர்ந்து, டூபூம் லாமில் (Doeboom lam) உள்ள பூடானின் மூன்றாம் அரசரின் நினைவு ஸ்தூபிக்குச் சென்றார். புத்த மத துறவிகள் பலர் மோடியை வரவேற்று அழைத்துச் சென்றனர். அங்கு பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
