திருப்பதி அருகே செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட புகாரில் தமிழகத்தைச் சேர்ந்த 18 பேர் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பக்ரா பேட்டை அருகே உள்ள சின்னக் கொட்டிகல்லு பகுதியில் போலீசார் சோதனை நடத்திய போது, 20க்கு மேற்பட்டோர் செம்மரங்களை வெட்டிக்கடத்தி வாகனத்தில் ஏற்றுவது தெரியவந்தது.
அவர்களை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தப்படவிருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 21 செம்மரக்கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்ட்ட 18 பேர் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், 4 பேர் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பீலேரியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து உள்ளூரை சேர்ந்த மேலும் நான்கு பேரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
