தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இந்த தாக்குதலுக்கு தாங்கள் தான் என பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில், இப்பிரச்சனையை சர்வதேச அளவில் இந்தியா எழுப்பியது. பல்வேறு நாடுகளின் தூதர்களை அழைத்து ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வெளியுறவு அமைச்சகம் மூலம் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலின் தடை விதிக்கும் குழுவிடம் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் முறையிட்டுள்ளன.
ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பின் தலைவனான மசூத் அசாருக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதை தடை செய்ய வேண்டும், அவனது சொத்துக்களை முடக்க வேண்டும், அசார் எந்த நாட்டிற்கும் செல்வதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை 3 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
