தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவர் சுதிஷை, அமைச்சர் தங்கமணி இன்று பிற்பகலில் சந்தித்து கூட்டணி குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக – பாஜக – பாமக கூட்டணி நேற்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து நேற்று மாலை தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து, பா.ஜ.கவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியுஷ் கோயல் நலம் விசாரித்தார். அப்போது அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவர் சுதிஷ் உடன் பியூஸ் கோயல் ஆலோசித்தாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் குறைவான இடங்களையே தேமுதிகவுக்கு கொடுக்க முன் வந்ததாகவும் இதை அக்கட்சி ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
பாமகவுக்கு சமமாக தொகுதிகள் வேண்டும் என்று தேமுதிக நிபந்தனை விதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தைக் குழு தலைவர் சுதிஷ் தலைமையில், நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பிற்பகலில் சுதிஷை, அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர் தங்கமணி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிக தலைமை அலுவலகத்தில் சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
