திருப்போரூரில் 9ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த கொடியவனை சாகும் வரை தூக்கில் போடுமாறு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரை சேர்ந்த, 9ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி, கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டார். ஆலத்தூரை சேர்ந்த அசோக்குமார் என்பவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, கழுத்தறுத்து கொலை செய்துள்ளான். இதுகுறித்து விசாரணை நடத்திய திருப்போரூர் போலீசார், வெறிச்செயலில் ஈடுபட்ட அசோக்குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி வேல்முருகன் இன்று தீர்ப்பு வழங்கினார். குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், பாலியல் பலாத்காரத்திற்காக அசோக்குமாருக்கு ஆயுள்தண்டணை மற்றும் 21ஆயிரம் அபராதம் விதித்தார். சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதோடு, கொலை செய்ததற்காக அசோக்குமாரை சாகும்வரை தூக்கிலிடுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
