நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான என்.சி.இ.ஆர்.டி. வகுக்கும் கல்வித் திட்டத்தைப் பின்பற்றி வருகின்றன. மாநிலக் கல்வி வாரியங்களும் அதில் உள்ள அம்சங்களைப் பின்பற்றியே கல்வித் திட்டத்தை வகுக்கின்றன.
இந்நிலையில் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, 3 முதல் 6 வயதுடைய குழந்தைகளுக்கு அவரவர் தாய் மொழியில் பாடங்களைக் கற்பிப்பதே சிறந்தது என்று உலகளாவிய சித்தாந்தத்தை கவுன்சில் சுட்டிக் காட்டியுள்ளது.
வேறு மொழிகள் கற்பிக்கப்படும் சூழல் ஏற்பட்டால் அதனை படிப்படியாகவே அமல்படுத்த வேண்டும் என்றும் என்.சி.இ.ஆர்.டி. தெரிவித்துள்ளது. புதிய மொழிகளை சைகையில் கற்றுத் தரலாம் என்று குறிப்பிட்டுள்ள கல்வி ஆராய்ச்சி கவுன்சில், மழலையர் பள்ளிகளில் எந்தவிதமான வாய்மொழித் தேர்வோ, எழுத்துத் தேர்வோ நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது.
மேலும் மாணவரின் தேர்ச்சி அல்லது தோல்வி தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கக் கூடாது என்று கூறியுள்ள கவுன்சில், குழந்தையின் பலவீனத்தை வெளிக்காட்டும் வகையில் ஆசிரியர்கள் செயல்படக் கூடாது என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடல், நடனம் போன்ற அபிநயங்கள் மூலம் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள கவுன்சில், தேவையற்ற அழுத்தத்தை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது என்றும் கருத்துருவில் கூறுப்பட்டுள்ளது. மேலும் வீட்டுப்பாடங்கள் எழுதி வரச் செய்து மாணவரிடம் மனச்சோர்வை ஏற்படுத்தக் கூடாது என்றும் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.