நிலவைச் சுற்றி வரும் அமெரிக்க விண் ஆய்வு நிறுவனமான நாசாவின் LRO ஆர்பிட்டர் நிலவில் செயலிழந்து சாய்ந்த விக்ரமின் புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பிவைக்க உள்ளது.
இதன் மூலம் சந்திரயான் 2 திட்டத்தின் கதி என்ன என்பது துல்லியமாக தெளிவாகும். விக்ரமுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் திட்டத்திற்கும் இது உதவக்கூடும். கடந்த செப்டம்பர் 7ம் தேதி நிலவில் தரையிறக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கடைசி நிமிடத்தில் தகவல் தொடர்பை இழந்துவிட்டது. அதனிடமிருந்து ஒரு தகவலையும் அதன்பின்னர் பெற முடியவில்லை.
நாசாவின் உதவியுடன் விக்ரம் லேண்டரின் நிலைமையை கண்டறிய இஸ்ரோ விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். நாசாவின் விண் ஆய்வு நிலையத்தில் இருந்து விக்ரம் லேண்டருக்கு ஹலோ சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன.
நேற்றிரவு இந்த ஆய்வுகளின் மற்றொரு முயற்சியாக நாசாவின் ஆர்பிட்டர் மூலம் நிலவில் விக்ரம் லேண்டர் உள்ள இடத்தை சரியாக கணிக்கும் வகையில் படம் எடுக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். நேற்றிரவு நாசா எடுத்த புதிய படங்களை இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
