வாரணாசி விமான நிலையத்தில், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார். பின்னர் வாரணாசியில் மரக்கன்றுகள் நடும் இயக்கத்தையும் மோடி தொடங்கிவைத்தார்.
இதைத் தொடர்ந்து, பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமை மோடி தொடங்கிவைத்தார். இதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியா 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாறுவதன் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கேக்கின் அளவும் முக்கியம் என ஆங்கிலத்தில் கூறப்படுவது வழக்கம் என்று சுட்டிக்காட்டிய மோடி, கேக் பெரிதாக இருக்கும்போதுதான் அதிலிருந்து பெரிய துண்டுகள் கிடைக்கும் என ஒப்புமையோடு அவர் குறிப்பிட்டார்.
5 ஆண்டுகளில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என தாம் உறுதியாக நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் சிலர், இதற்கு என்ன அவசியம் என கேள்வி எழுப்புவதாக குறிப்பிட்ட மோடி, அத்தகைய நபர்களை தொழில்முறை அவநம்பிக்கையாளர்கள் என விமர்சித்தார்.
எப்போதும் சந்தேகம், அச்சத்தை பரப்புவதோடு, எதையும் அடைய முடியாது என நினைக்கும் தொழில்முறை அவநம்பிக்கையாளர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் மோடி குறிப்பிட்டார்.
இந்தியாவால் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை எட்ட முடியுமா என பலர் சந்தேகிப்பதாகவும், இந்தியர்களால் எட்ட முடியாது என பலர் நினைப்பதாகவும் கூறிய மோடி, எவ்வளவு கடினமான சூழலிலும் எப்போதும் இந்தியா முன்னோக்கி நகர்ந்திருப்பதாக தெரிவித்தார். இந்த முறையும் இந்தியா முன்னேறி இலக்கை எட்டும் என மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
