காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவரின் காரை வழிமறித்து கண்ணாடியை உடைத்து 24 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
காஞ்சிபுரம் மளிகை செட்டி தெருவை சேர்ந்த அஞ்சலி ஸ்ரீபெரும்புதூரில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இரவு மருத்துவமனையில் பணிகளை முடித்துவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தார்.
ராஜகுளம்- ஏனாத்தூர் சாலையில் கார் சென்ற போது எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் திடீரென அஞ்சலியின் காரை வழிமறித்தனர். பின்னர் காரின் கண்ணாடியை உடைத்த கொள்ளையர்கள் கத்திமுனையில் மிரட்டி அவர் அணிந்திருந்த 24 சவரன் தங்க நகைகளை பறித்து கொண்டு ஓடி விட்டனர்.
இதுதொடர்பாக அஞ்சலி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர், சென்னையிலிருந்து வரும் நபர்களிடம் இதே பகுதியில் அடிக்கடி தொடர் கொள்ளை நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.