சிலை கடத்தல் வழக்குகளில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்த சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி பொன் மாணிக்கவேல் மற்றும் யானை ராஜேந்திரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். பொன் மாணிக்கவேலின் இணைப்பு மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி, யானை ராஜேந்திரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சிலை கடத்தல் சம்பவங்களில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற்றதாகவும், பொன் மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஆதாரங்களுடன் பதில்மனு தாக்கல் செய்ய பொன் மாணிக்கவேல் தரப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
WhatsApp us