கர்நாடகத்தில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் விலக்கிக் கொண்டதால், காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி கவிழும் அபாயம் அதிகரித்துள்ளது. அதேசமயம், அமைச்சர் பதவிகளை அளிப்பதன் மூலம், ராஜினாமா கடிதம் அளித்துள்ள 13 எம்எல்ஏக்களை இழுக்க காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில், பெரும்பான்மைக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. காங்கிரசுக்கு, சபாநாயகரையும் சேர்த்து 79 உறுப்பினர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 37 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த ஆளும் கூட்டணிக்கு 2 சுயேச்சைகளும், ஒரு பகுஜன்சமாஜ் உறுப்பினர் ஆதரவும் இருந்தது. இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். இவை சபாநாயகரால் ஏற்கப்பட்டால் அவையின் பலம் 211 ஆகக் குறைந்துவிடுகிறது. அப்போது பெரும்பான்மைக்கு 106 உறுப்பினர்கள் தேவை. 13 எம்எல்ஏக்கள் ராஜினாமாவுக்குப் பிறகு காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியின் பலம் 105 ஆக குறைந்துவிடுவதால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழ்ந்துவிடும். இந்த நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் வகையில், சுயேச்சை எம்எல்ஏக்களில் ஒருவரும், அமைச்சருமான நாகேஷ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளார். பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பதாக ஆளுநர் வஜுபாய்வாலாவிடம் கடிதம் அளித்துள்ளார்.
105 உறுப்பினர்களை பெற்றுள்ள பாஜக, சுயேச்சை எம்எல்ஏவின் ஆதரவைப் பெற்றுவிட்டதால், 106 என்ற பெரும்பான்மைக்கு தேவையான பலத்துடன் உள்ளது. ஆனால் இந்த நிலை, 13 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்பாரா இல்லையா என்பதைத் பொறுத்தது. சபாநாயகரை தொடர்பு கொள்ள முடியவில்லை, அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை என்று கர்நாடக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அமைச்சர் பதவிகளை அளிப்பதன் மூலம், ராஜினாமா கடிதம் அளித்துள்ள 13 எம்எல்ஏக்களை இழுக்க காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. ராஜினாமா கடிதம் அளித்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 4 பேர், துணை முதலமைச்சர் பரமேஸ்வராவுடனான கருத்து வேறுபாடு காரணமாகவே ராஜினாமா முடிவு எடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி அளிக்க வசதியாக, ஏற்கெனவே காங்கிரஸ் சார்பில் அமைச்சர்களாக உள்ளவர்கள் பதவி விலக தயார் என துணை முதலமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்திருந்தார். அவரது இல்லத்தில் முன்னணி தலைவர்கள் இன்று காலை கூடி ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்கள் முதலமைச்சர் குமாரசாமியிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜினாமா செய்த 13 எம்எல்ஏக்களும் திரும்பி வந்தால் அவர்களுக்கு அமைச்சர் பதவி உறுதி என்பதை காட்டவே, காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அதேசமயம், எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பாவும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் அமைச்சர் ஷோபா, குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால் உடனடியாக பதவி விலகவேண்டும் என வலியுறுத்தினார்.
