அந்தமானில் பழங்குடியினர் தீவுக்கு வெளியாட்கள் செல்ல மீண்டும் தடை விதிப்பது பற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
அந்தமான் பகுதியில், சென்டினல்கள் என்ற பழங்குடியினர் வசிக்கும் வடக்கு சென்டினல் தீவை தடை செய்யப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்த தடையை கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அரசு நீக்கியது.
அதன்பிறகு, அந்தமானுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர் சிலர், உரிய அனுமதி இன்றி, விதிமுறைகளை மீறி அந்த பகுதிக்கு சென்று உள்ளனர். இதுவரை இதுபோன்ற 44 விதிமீறல் சம்பவங்கள் நடந்ததாக தெரியவந்து உள்ளது. இரு வாரங்களுக்கு முன்பு வடக்கு சென்டினல் தீவுக்கு சென்று அங்குள்ள பழங்குடியினரை சந்திக்க முயன்ற ஜான் ஆலன் சாவ் (வயது 27) என்ற இளைஞர், அவர்களால் கொல்லப்பட்டார். இது தொடர்பான அறிக்கையை அந்தமான் நிகோபார் நிர்வாகம் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து இருக்கிறது.
இதைத்தொடர்ந்து அந்த தீவு பகுதிக்கு வெளியாட்கள் செல்ல மீண்டும் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதுபற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
WhatsApp us