நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, முதல்முறையாக தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 4 நாட்களுக்கு விவாதம் நடைபெற்ற நிலையில், பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பிறகு, இன்று தொடங்க இருக்கிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுவதற்காக தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.
கூட்டம் தொடங்கியதும், மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சூலூர் கனகராஜ் விக்கிரவாண்டி ராதாமணி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டம் ஒத்தி வைக்கப்படும். இதையடுத்து மீண்டும் ஜூலை 1ம் தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தொடரில் தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு, 7 தமிழர்கள் விடுதலை, அணுக்கழிவு உள்ளிட்ட பிரச்னைகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், இன்று காலை 11 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பேரவையில் திமுக எம்எல்ஏக்களின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
