மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பழமையான பாதாள சிறைச்சாலை இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அருகே வாகன நிறுத்தும் இடம் அமைப்பதற்கான பணிகள் பல நாட்களாக நடைபெற்று வருகின்றன.
அங்கு 30அடி ஆழத்தில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது நிலத்திற்கு அடியில் இருந்து 10 அடி நீளம் கொண்ட கருங்கல் தூண்கள் வெளிப்பட்டதால் தொழிலாளர்கள் குழப்பமடைந்தனர்.
இது தொடர்பாக ஆய்வு செய்த போது, அந்த இடத்தில் பாதாள சிறை இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வாகன நிறுத்துமிடம் அமைய உள்ள இடம், ராணி மங்கம்மாள் காலத்தில் சிறைச்சாலையாக இருந்ததாக கூறப்படுகிறது.
ராணி மங்கம்மாள் மதுரையை 1689 ஆம் ஆண்டு முதல் 1704 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
