பிரதமர் மோடி நேற்று முதல் வருகிற 26-ஆம் தேதி வரை பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன் ஆகிய மூன்று நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். டெல்லி விமான நிலையத்தில் அவரை அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.
சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் விமான நிலையம் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரிசில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் சான்டிலி (chantilly) நகரிலுள்ள சட்டவ் டி சான்ட்லி (chateau de chantilly)என்ற பாரம்பரிய கட்டடத்தை பிரான்ஸ் அதிபருடன் இணைந்து பிரதமர் மோடி பார்வையிட்டார்.
தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். சுமார் 90 நிமிடங்களுக்கு மேல் நடைபெற்ற இந்த சந்திப்பில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, விண்வெளி துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது, பயங்கரவாத எதிர்ப்பில் இணைந்து செயல்படுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் இரு நாடுகளுக்கு இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரன், காஷ்மீர் விவகாரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பிரதமர் மோடி தன்னிடம் விளக்கியதாக குறிப்பிட்டார். காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து தீர்வு காண வேண்டும் என்றும், 3வது நாட்டின் தலையீடோ, வன்முறையை தூண்டுதலோ இருக்க கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக இன்னும் சில தினங்களில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் தான் பேச இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியாவிற்கு வழங்க இருக்கும் 36 ரபேல் போர் விமானங்களில் முதல் விமானம் அடுத்த மாதம் வழங்கப்படும் என்றும் மேக்ரான் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திரமோடி, இந்தியா – பிரான்ஸ் இடையிலான உறவு சுயநலமற்றது என்றார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கையில் இருதரப்பு உறவு நீடிப்பதாக அவர் குறிப்பிட்டார். பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு துறையில் இருநாடுகளும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்று மோடி கூறினார்.
முதல் ரஃபேல் போர் விமானத்தை அடுத்த மாதம் வழங்குவதாக கூறியதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் தான் மகிழ்ச்சியடைவதாகக் கூறிய மோடி, அதனை நடத்துவதற்காக அதிபர் மேக்ரனுக்கும், பிரான்ஸ் மக்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்தியா, பிரான்சில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அனைத்து வடிவிலான பயங்கரவாதத்திறகும் இருதலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.தொடர்ந்து இருவரும் இரவு விருந்தில் பங்கேற்றனர். பாரிஸ் நகரில் உள்ள யுனஸ்கோ அலுவலகத்தில் பிரான்ஸ் வாழ் இந்தியர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்து உரையாற்றுகிறார்.
பின்னர் 1950 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளில் பிரான்சில் நடந்த இரு ஏர் இந்தியா விமான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் நினைவாக பாரீஸ் நகரில் அமைக்கப்பட்ட நினைவகம் ஒன்றையும் மோடி திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து பிரான்சில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் பிரதமர் மோடிக்கு அபுதாபியின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் சையத் வழங்கப்பட உள்ளது. அங்கிருந்து பக்ரைன் நாடு செல்லும் பிரதமர் மோடி, ரூபே கார்டின் பயன்பாட்டையும் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
25-ஆம் தேதி பக்ரைன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டின் பியாரிட்ஸ் நகரில் நடைபெறும் ஜி -7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
WhatsApp us