பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு 2014ம் ஆண்டில் இருந்து மும்பையில் ஒரு தீவிரவாதத் தாக்குதலும் நடைபெறவில்லை என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ர சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவரான யோகி ஆதித்யநாத், மும்பையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் போது இதனை தெரிவித்தார்.
காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட துணிச்சலான நடவடிக்கையை பாராட்டிய அவர், இந்த சட்டப்பிரிவு உருவாக்கப்பட்ட போது அம்பேத்கருக்கும் ஜவஹர்லால் நேருவுக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதையும் யோகி சுட்டிக் காட்டினார்.
காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தால் அந்த சட்டப்பிரிவை எப்போது வேண்டுமானாலும் நீக்கியிருக்க முடியும் என்றும் 70 ஆண்டுகளாக அது நிறைவேறவில்லை என்றும் கூறிய யோகி, பாஜக ஆட்சியில்தான் இது சாத்தியமானது என்றார்.