இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்குகிறது.
விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, அடுத்து புனேவில் நடந்த 2வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியதுடன் தொடரையும் கைப்பற்றியது.
முதல் டெஸ்டில் மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா ஆகியோரும், இரண்டாவது டெஸ்டில் கோலியும் அபாரமாக விளையாடினர். அஸ்வின், ஷமி, ஜடேஜா, உமேஷ் ஆகியோரின் பந்துவீச்சும் எதிரணியைத் திணறடித்து வருகிறது. இந் நிலையில், 3வது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று காலை தொடங்குகிறது.
அனைத்து வீரர்களும் நல்ல பார்மில் இருப்பதால் ஹாட்ரிக் வெற்றியுடன் தென் ஆப்ரிக்காவை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதே சமயம் ஆறுதல் வெற்றி அல்லது குறைந்தபட்சம் டிரா செய்ய தென் ஆப்ரிக்க அணியும் வரிந்துகட்ட வாய்ப்புள்ளது.
ஸ்டெயின், அம்லா, டி வில்லியர்ஸ் போன்ற வீரர்கள் இல்லாதது அந்த அணிக்கு வெற்றிடமாக கருதப்படுகிறது. டீன் எல்கர், டி காக், பவுமா, டு பிளெசிஸ் ஆகியோர் கணிசமாக ரன் குவித்தால் மட்டுமே இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.