தமிழ்மொழி அழகானது என்றும், தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையின்போது, கோவளம் கடற்கரை அருகே உள்ள நட்சத்திர விடுதியில் அவர் தங்கியிருந்தார்.
மாமல்லபுரம் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட மோடி, கடல் அலைகளில் கால்நனைத்துக் கடலோடு உரையாடியதாக கடந்த 13ந் தேதி கவிதை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்தி மொழியில் தாம் எழுதிய கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பையும் அவர் ட்விட்டரில் பதிவிட்டார்.
பிரதமரின் கவிதை வரிகளைப் பாராட்டி நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், இயற்கையை மதிப்பது கடவுளை மதிப்பதற்கு சமமானது என்றும், மாமல்லபுரம் தொடர்பாக எழுதிய கவிதைக்கு நன்றி என்றும் பதிவிட்டிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இயற்கையை மதிப்பது நமது கலாச்சாரத்தில் ஒன்று, மாமல்லபுரத்தின் அழகிய கடல் மற்றும் அங்கு நிலவிய அமைதியான சூழல் தமது எண்ணங்களை பிரதிபலிக்க மிகவும் உதவியாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் ட்விட்டரில் பாராட்டியதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, தமிழ்மொழி அழகானது- தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார். உலகின் பழமையான மொழியின் கலாச்சாரத்தில் தமது எண்ணங்களை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
