தமிழகத்தில் பரவலாக மழை பொழிவு தொடங்கவிருக்கும் நிலையில் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் மழை நீரை சேகரிக்க வேண்டும் என்று அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது
மழை நீர்… வையத்தின் உயிர் நீர்…! என்பது மழை நீர் சேகரிப்பின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் அற்புதமான தத்துவம்..!
லட்சக்கணக்கான வீடுகளும், வணிக வளாகங்களும், அடுக்குமாடி கட்டிடங்களும் உள்ள சென்னை மாநகரில் வெறும் 20% கட்டிடங்களில் கூட மழைநீர் சேகரிப்பு திட்டம் முறையாக பின்பற்றப்படுவதில்லை எனவும், நகரங்களில் தான் மழைநீர் சேகரிப்பு மிக அவசியம் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர் நீர்வள ஆராய்ச்சியாளர்கள். 2002ம் ஆண்டில் கட்டாயமாக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பொதுமக்கள் பின்பற்றாததும் அதனை முறையாக கண்காணிக்க அரசு தவறியதுமே நிலத்தடி நீர் சரிவுக்கும் வறட்சிக்கும் மிக முக்கிய காரணம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
வீடுகளின் மாடியில் இருந்து குழாய்கள் வழியாக மழைநீரை கொண்டு சென்று மணல், கூழாங்கற்கள் கொண்ட தொட்டிகளில் வடிகட்டுவது அல்லது நேரடியாக நிலத்திற்குள் மழைநீரை செலுத்தி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம். அடுக்குமாடி கட்டிடம் அல்லது வணிகவளாகங்களில் உள்ள அகண்ட வாகன நிறுத்தும் இடங்களில் விழும் மழைநீரை சாலையில் உள்ள மழைநீர்வடிகாலுக்கு அனுப்பாமல் நிலத்தில் சேகரிக்க வழிவகையுள்ளது. இதற்காக செலவிடும் சொற்பத் தொகை எதிர்கால தண்ணீருக்கான முதலீடு என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கை தவிர்க்க சாலைதோறும் அமைக்கப்பட்டுள்ள மழைநீர்வடிகால்களில் அடித்தளத்தில் நிலத்திற்குள் தண்ணீர் செல்லும் வகையில் துளை அமைப்பதோடு சாலைகளிலும் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைகாலம் தொடங்கி வருவதால் அடுத்து வரும் நாட்களிலும் மழைநீர் சேகரிப்பை உதாசீனப்படுத்தாமல் , அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சேகரிப்பை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கவும், மழைநீர் சேகரிப்பு உள்ள கட்டிடங்களுக்கு மட்டுமே குடிநீர், கழிவுநீர் மற்றும் மின் இணைப்பு அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது
வறண்டு கிடக்கும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றும் மழைநீர் சேகரிப்பை, தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் இல்லத்தில் பின்பற்ற வேண்டும் என்பதே அரசின் வேண்டுகோளாய் உள்ளது.
