மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் வரும் அக்டோபர் மாதம் சந்தித்து கொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்வின் போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு அக்டோபர் 11ந்தேதி முதல் 13ந்தேதி வரை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் தலைவர்கள் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் பாதுகாப்பு வசதி மற்றும் அங்குள்ள இடங்களை உயர் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ச்சியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் இடையேயான சந்திப்பு நடைபெற உள்ளதாக கூறப்படும் மாமல்லபுரத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தலைமை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இதில் வெளியுறவு துறை அதிகாரிகள், பிரதமரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இன்னும் சில தினங்களில் சீனாவில் இருந்து அங்குள்ள அதிபரின் பாதுகாப்பு படையினர் மாமல்லபுரத்திற்கு வந்து ஆய்வு நடத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
