பிரதமர் மோடி வரும் 23ம் தேதி முதல் மூன்று நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகளுக்கு செல்கிறார்.
இந்த பயணத்தின்போது ஐக்கிய அமீரக அரபு அரசு அளிக்கும் மிகவும் உயரிய விருதான ஆர்டர் ஆப் ஜயேத் ( order of zayed) விருதை மோடி பெற உள்ளார்.இருநாடுகளுக்கும் இடையே நட்பை வலுப்படுத்தி வர்த்தக உறவுகளை மேம்படுத்தியதற்காக மோடிக்கு இந்த விருது வழங்கப்படுவதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் யு.ஏ.இ அரசு அறிவித்தது.
இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக ஐக்கிய அரபு அமீரகம் விளங்குகிறது. கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதில் நான்காவது இடத்தில் அது உள்ளது. இந்த பயணத்தின் போது அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜையத் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த மோடி திட்டமிட்டுள்ளார்.
