ஜம்மு காஷ்மீர் மீது பாகிஸ்தான் ஒரு தீய பார்வையை கொண்டுள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயுதம் ஏந்திய படைவீரர்களுக்கு விடுத்த வாழ்த்துச் செய்தியில், பிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலகோட்டில் வான்வழித்தாக்குதல் நடத்தியதை சுட்டிக்காட்டினார்.
இந்திய எல்லைகள் மீது அண்டை நாடு தீயபார்வை வைத்துள்ளதாக குறிப்பிட்ட ராஜ்நாத்சிங், இதன் காரணமாகவே ஜம்மு காஷ்மீரில் அமைதி குலைக்கப்படுகிறது என்றார். யுத்தம் ஏற்பட்டால் கடல்,வான், நிலம் என்று நின்றுவிடாமல், சைபர் மற்றும் விண்வெளியிலும் யுத்தம் வெடிக்கும் என்பதை சுட்டிக்காட்டிய ராஜ்நாத்சிங், இதனை கருத்தில் கொண்டுதான் உளவு செயற்கைக்கோளை சுட்டுவீழ்த்தும் சோதனையை இந்தியா நடத்திப் பார்த்ததாக தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்புக்காக மட்டும்தான் இந்தியா தாக்குதல் நடத்தும் என்றும் ராஜ்நாத் சிங் உறுதிபடத் தெரிவித்தார்.
