சென்னையில் மண்ணடி மற்றும் புரசைவாக்கத்தில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈஸ்டர் தினத்தன்று, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பானது இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலை நிகழ்த்தியது. இதில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகளுடன் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு உளவுத்துறை கூறி இருந்தது.
இதன்படி, கேரளாவிலும், தமிழகத்திலும் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பலரைக் கைது செய்தனர். பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொச்சியில் உள்ள அலுவலகத்தில் இருந்து இன்று சென்னை வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவானது, மண்ணடி லிங்கி செட்டி தெருவில் உள்ள இஸ்லாமிக் ஹிண்ட் என்ற அமைப்பின் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகிறது.
அந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே சோதனை நடத்தபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இலங்கை தற்கொலைத் தீவிரவாதியான ஜஹ்ரான் ஹசீம், தாக்குதலுக்கு சில நாட்கள் முன்பு மண்ணடி வந்ததாக கூறப்படுவதால், இங்கு தங்கினானா? என்றும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மண்ணடியை தொடர்ந்து புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
