ஐ.நா. பொது சபையின் 74ஆவது கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். வழியில் அவர் சென்ற விமானம், ஜெர்மனியின் பிராங்போர்ட் விமான நிலையத்தில் 2 மணி நேரம் நின்றது. பின்னர் அந்த விமானம் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றது.
அமெரிக்காவின் ஹுஸ்டனுக்கு முதலில் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நாளை நடைபெறவுள்ள மோடி நலமா? (Howdy, Modi) எனும் பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திய வம்சாவளி மக்களிடையே உரை நிகழ்த்தவுள்ளார்.
இதில் அமெரிக்க அதிபர் டிரம்பும் கலந்து கொள்ள இருக்கிறார். அப்போது மோடியும், டிரம்பும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், டிரம்பும் நாளை மறுநாள் (திங்கள்கிழமை) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதன்பின்னர் பிரதமர் நரேந்திர மோடியும், டிரம்பும் செவ்வாய்க்கிழமை மீண்டும் 2ஆவது முறையாக சந்தித்துப் பேசுகின்றனர்.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவுக்கு வரும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு டிரம்ப் செவ்வாய்க்கிழமை விருந்து அளித்து கெளரவிக்கவுள்ளார்.
அந்த விருந்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. ஏனெனில், அதேநாளில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் மோடி பங்கேற்க முடிவு செய்துள்ளார். இதில் ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், நியூஸிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டர்ன், வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா, தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் (Moon Jae-in), சிங்கப்பூர் பிரதமர் லீ சின் லூன் (Lee Hsien Loon) கலந்து கொள்கிறார்கள்.
டிரம்ப் அளிக்கும் விருந்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொள்கிறார். மோடியும், டிரம்பும் 2 முறை சந்திப்பதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தத் திட்டத்தை பாகிஸ்தான் அதிகாரிகள் வடிவமைத்துள்ளனர். டிரம்புடனான சந்திப்பின்போது காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டுமென இம்ரான் கான் மீண்டும் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.
