18 ஆண்டுகளில் தற்போது தான் விடுப்பு எடுப்பதாக, ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேர் கிரில்ஸ் தொகுத்து வழங்கும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம்கார்பெட் தேசிய பூங்காவில் படம் பிடிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி நேற்று ஒளிப்பரப்பானது.
இந்த சாகச பயணத்தின் போது, பேர் கிரில்ஸ் மோடியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதற்கு அமைதியாக பதிலளித்த பிரதமர் மோடி, மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதே தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும் நாட்டின் வளர்ச்சியில் தனது முழு கவனமும் இருப்பதாக கூறிய அவர், 18 ஆண்டு கால அரசு பணியில் தற்போது தான் விடுப்பு எடுப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறினார். அனைத்து செயல்களிலும் சாதகத்தையே எதிர்பார்த்து செயல்படுவதால் பயம் என்பது தனக்கு இல்லை என்றும், மக்கள் இயற்கை வளத்தை அழிக்காமல் எதிர்கால தலைமுறைக்கு விட்டு செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், 13 ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்ததாகவும், நாட்டு மக்கள் தன்னை பிரதமராக்க முடிவு செய்ததால், கடந்த 5 ஆண்டுகளாக பிரதமராக பணியாற்றுவதாகவும், இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தனித்தனியாக பிரித்து பார்ப்பதற்கு பதில், ஒட்டுமொத்தமாக பார்த்து, தாழ்வு நிலையில் இருந்து முன்னேறி வரவேண்டும் என்று மோடி அறிவுரை வழங்கினார்.
