பக்தர்கள் வசதிக்காக சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை நவம்பர் மாதம் முதல் தொடங்குகிறது.
சபரிமலைக்கு விமானத்தில் பயணம் செய்பவர்கள் கொச்சி விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து காரில் பம்பை செல்ல வேண்டும். இந்நிலையில் இந்த ஆண்டு முதல் சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை தொடங்க இருக்கிறது.
விமானப் பயணிகள் கொச்சி விமான நிலையத்தில் இருந்து காலடி வரை காரில் அழைத்து செல்லப்படுவார்கள். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் செல்லலாம். 4 பேர் பயணிக்கும் ஹெலிகாப்டரில் காலடியில் இருந்து நிலக்கல் வரை செல்ல முடியும். இதற்காக காலடியிலும், நிலக்கல்லிலும் ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 7 மணிக்கு காலடியில் இருந்து முதல் ஹெலிகாப்டர் புறப்படும். 35 நிமிடத்தில் நிலக்கல் சென்றடையும். தினமும் இரு மார்க்கத்திலும் 6 முறை இயக்கப்படும்.மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களான நவம்பர் 17-ந்தேதி தொடங்கி ஜனவரி 16 வரை ஹெலிகாப்டர் சேவை இருக்கும் என்றும் கேரள தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
