சென்னை: சிதம்பரம் கைது செய்யப்படுவதை விடவும் தலைமறைவாக இருப்பது மோசமானது. இது, அவர் ஒரு குற்றவாளி மட்டுமல்ல ஒரு கோழை என துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கான முன் ஜாமீன் மனுவையும் டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்ய சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது. முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிதம்பரத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு தலைவர்கள், பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
”சிதம்பரம் கைது செய்யப்படுவதை விடவும் தலைமறைவாக இருப்பது மோசமானது. அவர் ஒரு குற்றவாளி மட்டுமல்ல ஒரு கோழை என இது காட்டுகிறது.போலி ஆவணங்கள் அடிப்படையில் நாங்கள் கைது செய்யப்பட்ட போது துணிச்சலுடன் நாங்கள் அதை எதிர்கொண்டடோம். எனவே மோசடி செய்தவர் என்பதை விடவும் அவர் ஒரு கோழை என அழைக்கும் உரிமை உண்டு” என குருமூர்த்தி கூறியுள்ளார்.
போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம் தொடர்பாக கட்டுரை எழுதிய குருமூர்த்தி 1987-ம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அந்த கைதும் பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியது. அதனை குறிப்பிட்டு குருமூர்த்தி தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
