ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்தை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் முன்ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த 21 ஆம் தேதி கைது செய்தது. அதிலிருந்து அவர் தொடர்ச்சியாக சிபிஐ விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே, சிபிஐ காவல் முடிந்து அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக ப.சிதம்பரம் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா அமர்வு ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் கோரிக்கையை நிராகரித்துவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கு முன்ஜாமீன் வழங்குவதற்கு ஏற்ற வழக்கு அல்ல என்று குறிப்பிட்டனர். பொருளாதார குற்றங்கள் மாறுபட்டவை என்பதால், அவற்றை மாறுபட்ட முறையில் அணுக வேண்டியிருப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வழக்கில் விசாரணை நடத்துவதற்கு, விசாரணை அமைப்புக்கு உரிய சுதந்திரம் உள்ளது என்றும், தொடக்க நிலையிலேயே முன்ஜாமீன் வழங்குவது விசாரணைக்கு ஊறு விளைவிக்கும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். தேவையானால் விசாரணை நீதிமன்றத்தை அணுகி, ப.சிதம்பரம் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சி.பி.ஐ.காவல் முடிந்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஆதாரங்களை சிதம்பரம் கலைக்க வாய்ப்புள்ளதால் அவரை சிறைக்கனுப்ப வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது. எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், தாங்கள் எதையும் கலைக்கப் போவதில்லை என சிதம்பரம் தரப்பில் கூறப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ப.சிதம்பரத்தை வரும் 19 ஆம் தேதி வரை சிறையிலடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
