சந்திரயான் 2ஐ நிலவில் தரை இறக்கும் 15 நிமிடங்கள் பதற்றமான நிமிடங்களாக இருக்கும் எனக் கூறியுள்ள இஸ்ரோ தலைவர் சிவன், அந்த தருணம் பிறந்த குழந்தையை கையில் ஏந்துவதற்கு ஒப்பானது எனத் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், பிரக்யான் ஆய்வூர்தியுடன், நாளை அதிகாலை 1.30 மணி தொடங்கி 2.30 மணிக்குள்ளாக நிலவில் தரை இறக்கப்படுகிறது.
இதற்கான ஆயத்தப் பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டுள்ள நிலையில், அதன் தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சந்திரயான் 2ஐ நிலவில் தரை இறக்குவது, திடீரென ஒருவர் வந்து ஒரு பிறந்த குழந்தையைக் கொடுத்து கையில் ஏந்தச் சொல்வதற்கு ஒப்பானது என்றார்.
பிறந்த குழந்தை எப்படி வேண்டுமானாலும் உடலை அசைக்கும் எனக் குறிப்பிட்ட அவர், அதேபோலத்தான் லேண்டரும் இருக்கும் என்றும், ஆனால் குழந்தையைப் போன்று தாங்கிப் பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நிலவில் விண்கலத்தை தரை இறக்கும் செயல்பாடுகளை ஏற்கெனவே செய்தவர்களுக்கு கூட, ஒவ்வொரு முறையும் மீண்டும் இதைச் செய்யும்போது சிக்கலானதாகவேதான் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரோவுக்கு இது புதிது எனவும், ஆகவே, சந்திரயான் 2ஐ தரை இறக்கும் 15 நிமிட செயல்பாடு, பதற்றமானதாக இருக்கும் என்றும் விஞ்ஞானி சிவன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
