தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. பசும்பால் விலை லிட்டருக்கு 4 ரூபாயும், எருமைப்பால் விலை லிட்டருக்கு 6 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனை ஏற்று, பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 32 ரூபாயாகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 41 ரூபாயாகவும் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதேபோன்று பால் விற்பனை விலையும் அதிகரித்து, ஆவின் சார்பில் புதிய விலைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 500 மில்லி ஆவின் நைஸ் பால் அதிகபட்சமாக 21 ரூபாய் 50 காசுகளாகவும், ஆவின் மேஜிக் 23 ரூபாய் 50 காசுகளாகவும், ஆவின் கிரீம் பால் 25 ரூபாய் 50 காசுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதனிடையே, சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பால் உற்பத்தியாளர்கள், எதிர்க்கட்சி தலைவர் என அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக கூறினார். கடந்த 5 ஆண்டுகளில், தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் வரவு உயர்ந்திருக்கும் நிலையில், பால் உற்பத்தியாளர்களான, விவசாயிகளுக்கும், லாபகரமான விலை அளிப்பது தான் நியாயமாக இருக்கும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
