பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த “அம்மா பேட்ரோல்” எனப்படும் ரோந்து வாகனத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, ஏடிஜிபி தலைமையில் தனிப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த பிரிவுக்கு மாவட்டந்தோறும் தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மகளிர் காவல் நிலையங்களுடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் இந்தப் பிரிவே விசாரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் உள்ள காவல் நிலையங்களுக்கு என பிரத்யேகமாக பிங்க் நிற ரோந்து வாகனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான ஹெல்ப்லைன் நம்பர் 1098, மற்றும் பெண்களுக்கான ஹெல்ப்லைன் நம்பர் 1091 என வாகனத்தில் பதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு கோடியே 50 லட்சம் மதிப்பீட்டிலான 40 வாகனங்களை முதலமைச்சர் காவல்துறையிடம் ஒப்படைத்தார். முதற்கட்டமாக சென்னையில், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பணியில் உள்ள 35 காவல் நிலையங்களுக்கு இந்த ரோந்து வாகனங்கள் கொடுக்கப்படுகின்றன.
விரைவில் தமிழகம் முழுவதும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் காவல் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த நிகழ்வில், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர் சண்முகம், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி திரிபாதி, சென்னை பெரு நகர காவல் ஆணையர் விஸ்வநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
