குழந்தைகளுக்கு எதிரான கொடூர பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வரை விதிக்கும் வகையில் போக்சோ சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தண்டனையை அதிகரிக்க வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, இந்த மசோதாவை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்தார். விவாதத்தில் 28 எம்பிக்கள் பங்கேற்றுப் பேசினர். கட்சிப் பாகுபாடின்றி இந்த மசோதாவில் கூறப்பட்டிருந்த சட்டத்திருத்தங்களுக்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
குற்றவாளிகளை தடுக்கவும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கண்ணியமான குழந்தை பருவத்துக்காகவும் பல்வேறு குற்றங்களுக்கான தண்டனைகளை அதிகரிக்க ஏதுவாக சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. சிறார்களுக்கு ஆசை காட்டியும் வன்முறையைப் பயன்படுத்தியும் பாலியல் இச்சைக்கு உடன்படுத்துவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும்.
சிறுவர்களை ஆபாசமாக பயன்படுத்தினாலோ, ஆபாச படங்களை விநியோகித்தாலோ வாட்ஸ் ஆப் போன்றவற்றில் பரப்பினாலோ 5 முதல் 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கவும் இச்சட்டம் வகை செய்கிறது.சிறுவர், சிறுமிகளிடம் பாலியல் வன்முறை செலுத்துவோருக்கான சிறைத்தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படலாம்.
தொடர்ந்து பேசிய ஸ்மிருதி இரானி, சிறார் காப்பகங்களின் அவல நிலைமை குறித்து எம்பிக்கள் சுட்டிக் காட்டிய பிரச்சினைகளில் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். சிறார்கள் மீதான பாலியல் குற்ற வழக்குகளை விசாரித்து விரைவாக தீர்ப்பளிக்க ஆயிரத்து 23 விரைவு நீதிமன்றங்கள்அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.
